இலக்கணப் பேரறிஞர் மருதூர் அரங்கராசன்…

வழமையானது
முனைவர் மருதூர் அரங்கராசனார்
கல்லூரி மாணவனாக யான் இருந்தபொழுது பொதுநூலகம் ஒன்றில் ஓர் இலக்கண நூலை எடுத்துப் புரட்டிக்கொண்டிருந்தபொழுது மருதூர் அரங்கராசன் என்ற பெயரைப் பார்த்து வியப்படைந்தேன். எங்களூருக்கு அருகில் இருந்த மருதூர், உடையார்பாளையம் உள்ளிட்ட ஊர்ப்பெயர்கள் அந்த நூலில் இருப்பதைக் கண்டு எனக்குப் பெருமகிழ்ச்சி ஏற்பட்டது. அந்த நூலை அப்பொழுது மேலோட்டமாகப் புரட்டிவிட்டு, மருதூர் அரங்கராசன் யார்? என்ற வினவுதலில் ஈடுபட்டிருந்தேன்.

யாண்டு பல கழிந்தன. பின்னர் நெய்வேலியில் கல்லூரி முதல்வராக மருதூரார் பணியாற்றுவது அறிந்து பலவாண்டுகளுக்கு முன்னர் நேரில் சென்று கண்டுள்ளேன். அதன்பிறகு மடலிலும் தொலைபேசியிலும் தொடர்புகொண்டு ஐயாவிடம் உரையாடுவது உண்டு. பலவாண்டுகளாக ஐயாவின் பணிகளை முழுமையாக அறியும்பொருட்டு அவர்களின் தன்விவரக் குறிப்பைக் கேட்டுப் பார்த்து ஓய்ந்துவிட்டேன். திரு. இரா. பஞ்சவர்ணம் ஐயா அவர்களும் நானும் இணைந்து மருதூராரைச் சந்திக்க பலமுறை முயன்றும் தோற்றோம். நேற்று சென்னை செல்லும் வாய்ப்பு அமைந்ததைப் பயன்படுத்தி, ஐயாவின் இல்லம் சென்று அவர்களின் தமிழ்ப்பணியைப் பற்றி உரையாடி மீண்டேன். மருதூரார் அவர்களின் சிறப்பினை இத்தமிழுலகம் அறியும்பொருட்டு அவர்தம் வாழ்க்கைக்குறிப்பைப் பதிந்துவைக்கின்றேன்.

தமிழகத்தில் இலக்கணம் குறித்து ஆழமான ஆய்வுகளை நடத்தி, நூல்கள் வழியாக மக்களுக்கு அரிய செய்திகளைத் தந்துவரும் பேராசிரியர்களுள் முனைவர் மருதூர் அரங்கராசன் அவர்கள் குறிப்பிடத்தகுந்தவர். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் மருதூர் என்னும் ஊரில் 09. 12. 1952  இல் பிறந்தவர். பெற்றோர் திருவாளர் கா. வை. இரா. சண்முகனார், அலர்மேல்மங்கை ஆவர்.

தொடக்கக் கல்வியையும் உயர்நிலைக் கல்வியையும் மருதூரில் நிறைவு செய்த அரங்கராசனார், புகுமுக வகுப்பை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். இளம் அறிவியல் வகுப்பினைச் சென்னைத் தியாகராயர் கல்லூரியிலும் முதுகலைத் தமிழ் இலக்கியப்படிப்பைத் தஞ்சாவூர், பூண்டியில் அமைந்துள்ள திருபுட்பம் கல்லூரியிலும் பயின்றவர். அதன் பிறகு இளம் முனைவர் பட்டத்திற்குப் பொருள்கோள் என்ற தலைப்பில் ஆய்வுசெய்தவர். வேற்றுமை மயக்கம் என்ற தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர். இவர்தம் நெறியாளராக இருந்து இலக்கணத் துறையில் மிகச் சிறந்த ஆராய்ச்சியாளராக இவரை வளர்த்தெடுத்த பெருமை முனைவர் பொற்கோ அவர்களுக்கு உண்டு. தம்மை நிறைபுலமைச் சான்றோராய் அமைத்துக்கொள்ள பல்வேறு துறைகளில் பட்டயம், சான்றிதழ்க் கல்வியைக் கற்றுள்ளார். அவற்றுள் சமற்கிருதம் பட்டயம், மொழியியல் சான்றிதழ் ,  முதுகலை கல்வியியல், முதுகலை உயர்கல்வியியல், பள்ளிக்கல்வி பட்டயம்,  ஆகியவை குறிப்பிடத்தகுந்தன.

                மருதூரார் சென்னை சர் மு. சித. மு. மேனிலைப் பள்ளியில் முதுநிலைத் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கியவர் (1979- 87). அதன் பின்னர் நெய்வேலி சவகர் அறிவியல் கல்லூரியில் துணைப்பேராசிரியராகப் பணியேற்று, தமிழ்த்துறைத் தலைவராகவும், கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர்(1993-2011). சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேரகராதியின் செம்பதிப்புப்பணியில் இணைப்பதிப்பாசிரியராகப் பணியாற்றியவர்(2011-2013). சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகத்தில் விருந்துநிலைப் பேராசிரியராகவும், இலக்கணப் பாடநூல் எழுதுநர், பாடப்பொருள் மதிப்பீட்டாளர் என்ற நிலைகளிலும் பணியாற்றும் பெருமைக்குரியவர்.
               
மருதூராரின் தமிழ்க்கொடை:
1.            பொருள்கோள், 1979
2.            இலக்கண வரலாறு: பாட்டியல் நூல்கள், 1983
3.            தமிழில் மரபுத் தொடர்கள், 1998
4.            தமிழில் வேற்றுமைகள், 2000
5.            தமிழில் வேற்றுமை மயக்கம், 2000
6.            தவறின்றித் தமிழ் எழுத… 2005
7.            யாப்பறிந்து பாப்புனைய… 2005(தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்)
8.            ஓர் அழுகை ஆதரவு தேடுகிறது 1984 (புதுக்கவிதைத் தொகுப்பு)
9.            பண்டைய ரோமானியர்களின்
                பெயர்சூட்டு விழாவும் பெயரீட்டு முறையும் (அச்சில்)
10.          நாளும் நல்ல தமிழ் எழுத …(அச்சில்)
11.          தமிழின் தொன்மையும் தமிழர் பெருமையும் (பதிப்பாசிரியர்), 2007
12.          திருக்குறள் உணர்த்தும் வாழ்வியற் கோட்பாடுகள் (ப.ஆ.) 2008
13.          ஆய்வு நோக்கில் சங்க இலக்கியம் (பதிப்பாசிரியர்), 2009
14.          செவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புறக் கலைகளின் தாக்கம்,(ப.ஆ.), 2014
தொடர்பு முகவரி :    

மருதூர் அரங்கராசன்  (S. RENGARAJAN)
 5, பாலாசி அடுக்ககம் 12, மூன்றாவது முதன்மைச் சாலை
காந்தி நகர், அடையாறு,  சென்னை – 600 020
கைப்பேசி  : + 91  96002 44444
மின்னஞ்சல்: marudurar@yahoo.co.in

குறிப்பு: கலைக்களஞ்சியத் தொகுப்பாளர்கள், கட்டுரையாளர்கள் இக்குறிப்புகளை எடுக்கும்பொழுது எடுத்த இடம் குறிப்பின் மகிழ்வேன்.

சென்னையில் குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழாக் காட்சிகள்

வழமையானது
முனைவர் ஔவை நடராசன் தலைமையில் திரு. மோகன் குறுவட்டை வெளியிட மு. இளங்கோவன் பெற்றுக்கொள்கின்றார்.

  சென்னை, திருவான்மியூரில் அமைந்துள்ள சரசுவதி வெங்கட்ராமன் பள்ளியில் 01.06.2014 மாலை 4 மணிக்குக் குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழாவைப் ப.சு. அவர்களின் மாணவர்கள் மா. வயித்தியலிங்கன், மா. கோடிலிங்கம் ஏற்பாடு செய்து நடத்தினர். 

  முனைவர் ஔவை நடராசன் ஐயா தலைமையில் நடைபெற்ற இந்த நூற்றாண்டு விழாவில் குடந்தை ப.சுந்தரேசனார் பாடல்கள் அடங்கிய குறுவட்டு வெளியிடப்பட்டது. திரு. மோகன் அவர்கள் வெளியிட மு. இளங்கோவன் பெற்றுக்கொண்டார். திரு. மோகன், பேராசிரியர் மா. வயித்தியலிங்கன், திரு. மா. கோடிலிங்கம், பேராசிரியர் செல்வகணபதி, திரு. விசய திருவேங்கடம் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினர். களக்காடு சீதாலெட்சுமி அவர்களின் பண்ணிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.


இறைவாழ்த்து திரு. மா. கோடிலிங்கம்


குறுவட்டினைப் பெறும் காட்சி


முனைவர் ஔவை நடராசன் தலைமையுரை


முனைவர் மு.இளங்கோவனின் முயற்சியைப் பாராட்டும் விழாக்குழுவினர்

குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப் படப்பிடிப்புக்கு இலால்குடி சென்ற வரலாறு…

வழமையானது
இலால்குடியில் குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழா
28. 05. 2014 அறிவன்(புதன்) வைகறை 4 மணிக்கு விழித்தேன். முன்பே திட்டமிட்டபடி 4. 45 மணிக்கு முன்றிலில் மகிழ்வுந்து வந்து நின்றது. கைப்பை, கணினி, புகைப்படக் கருவி உள்ளிட்ட முதன்மைப் பொருள்களுடன் புறப்பட்டேன். நண்பர் சிவக்குமார் தன் உதவியாளருடன் அவர் இல்லத்தில் படப்பிடிப்புக் கருவிகளுடன் காத்திருந்தார். அவர்களை ஏற்றிக்கொண்டு அடுத்து ஐயா அமரநாதனை அழைக்க அவர் அலுவலகம் சென்றோம். ஒரிரு மணிக் காத்திருப்புக்குப் பிறகு ஐயாவும் எங்களுடன் இணைந்துகொண்டார்.

புதுவையிலிருந்து வழி நெடுக இயற்கைக் காட்சிகளைக் கண்டுகளித்தவண்ணம் கடலூரைக் கடந்தோம். குள்ளஞ்சாவடிக்கு அருகில் இருந்த வயல்காட்சிகள் சிலவற்றைப் படமாக்கினோம். அடுத்து வடலூர்- சேத்தியாத்த்தோப்பு வழியாகக் கங்கைகொண்டசோழபுரம் சென்றோம். அங்கு எங்கள் நண்பர் சீத்தாபதி காத்திருந்தார். அங்கும் சில காட்சிகளைப் படமாக்கினோம். அடுத்து இடைக்கட்டில் உள்ள நம் வீட்டில் சில காட்சிகள் படமாக்கப்பட்டன. காலை உணவுக்காகச் செயங்கொண்டத்தில் நண்பர் இரா. இரவி காத்திருந்தார். அவருடன் இணைந்து காலைச் சிற்றுண்டியை அனைவரும் முடித்தோம்.

எங்கள் வருகை முன்பே தெரிவிக்கப்பட்டிருந்ததால் உடையார்பாளையம் அரண்மனையில் அரச குடும்பத்தைச் சார்ந்த திரு. பெ. சிவக்குமார் அவர்களும் அவர்களின் உடன்பிறந்தாரும் காத்திருந்து எங்களை எதிர்கொண்டு வரவேற்றனர். அங்கும் சில மணி நேரம் படப்பிடிப்பு நடந்தது. அதற்குள் அரண்மனையிலிருந்து தேநீர் வந்தது. அதனை அருந்தி அங்கிருந்தவர்களிடம் விடைபெற்றுப் புறப்படும் முன் அழகிய புறாக்கள் பறத்தல் காட்சி கண்ணில் தென்பட்டது. அதனையும் காட்சிப்படுத்திக்கொண்டு அரியலூரை நோக்கிப் புறப்பட்டோம்.
 உடையார்பாளையம் அரண்மனையின் முகப்பில்

அரியலூரில் புலவர் சுவை. மருதவாணனார் எங்களுக்காகக் காத்திருந்தார். இவர் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனாருடன் பழகிய பெருமகனார். அவரை நேர்காணல் செய்துகொண்டு, அவர் வழங்கிய சில அரிய நூல்களைப் பெற்றுக்கொண்டு அவரையும் உடனழைத்துக்கொண்டு கீழைப்பழுவூர் திருக்கோயிலை அடைந்தோம். அங்கு நம் ப. சு. அவர்கள் தொடர்ப்பொழிவு செய்த இடத்தைப் படமாக்கிக்கொண்டு அடுத்து எங்கள் மகிழ்வுந்தில் திருமானூர் வழியாகத் திருமழபாடி சென்றோம்.

திருமழபாடியில் உள்ள திருக்கோயில் இறைவன் “மழபாடி மாணிக்கமே” என்று அருளாளர்களால் பாடப்பெற்ற  பெருமைக்குரியது. குடந்தை ப.சுந்தரேசனாரின் முயற்சியால் அக்கோயில் இறைவன்மீது பாடப்பெற்ற திருமுறைப்பாடல்கள் கல்வெட்டாக வெட்டிப் பாதுகாக்கப்படுகின்றன. புன்செய்ப் புளியம்பட்டி மறைமலையடிகள் மன்றத்தார் இக்கல்வெட்டு அமைக்க நிதி நல்கி ஆதரவுகாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அவற்றையெல்லாம் கண்ணாரக் கண்டும் வேண்டிய அளவு படமாக்கிக்கொண்டும் இருந்தபொழுது மழை பெய்யத் தொடங்கியது.மழைச்சூழலில் புலவர் திருநாவுக்கரசரின் நினைவுரைகள் படமாயின.

கொள்ளிடக் கரையில் இயற்கை எழில்சூழ அமைந்த அக்கோயிலின் அழகை நாள்முழுவதும் கண்டு மகிழலாம். இயற்கை விரும்பிகளுக்கு அந்த ஊர் நல்ல ஊர். கொள்ளிடத்தின் மணல்காட்சிகளையும் படமாக்கிக்கொண்டோம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை எங்கும் நீர் நிறைந்து புனல்பெருக்காக இருக்க வேண்டிய ஆறு மணல்பெருக்காக இருந்தது.

பகலுணவுக்கு நாங்கள் தயாரானோம். புலவர் திருநாவுக்கரசு ஐயா எங்களுக்கு அங்குள்ள சூழல்களை விளக்கியதுடன் உணவு உண்ண ஒரு கடைக்கு அழைத்துச் சென்றார்கள். சிற்றூர்ப் புறச்சூழலில் இனிமையாக அந்தக் கடைக்காரர் விருந்தோம்பினார். மீண்டும் இந்தப் பகுதிக்கு வந்தால் அந்தக் கடையில் உண்ண வர வேண்டும் என்ற விருப்பத்துடன் பேராசிரியர் முனைவர் அ. ஆறுமுகம் ஐயா இல்லம் சென்றோம் ஐயா ஆறுமுகம் அவர்கள் திருமழபாடித் தமிழ்ச்சங்கம் கண்டவர். ப. சு. அவர்களை அழைத்துச் சிறப்புச் செய்தவர். நம் திருநாவுக்கரசு ஐயா அவர்கள் ப. சு. அவர்களின் திருத்தொண்டர் எனில் பொருந்தும் இருவரிடமும் நேர்காணலை முடித்துக்கொண்டு இலால்குடி நோக்கி எங்கள் மகிழ்வுந்து விரைந்தது. ஏனெனில் இலால்குடியில் ப. சு. நூற்றாண்டு விழாவில் நான் தொடக்கவுரையாற்ற வேண்டும் என்று இலால்குடி அன்பர்கள் கேட்டுக்கொண்டார்கள். காலையில் பேச வேண்டிய நான் மாலை வரை படப்பிடிப்பில் இருந்த்தால் இரவுக்குள் சென்று பேசிவிடுவோம் என்று வேகமாக விரைந்தோம்.


புள்ளம்பாடியை நெருங்கியபொழுது ஒரு செம்மறியாட்டுக்கூட்டம் தொகையாகச் சாலையைக் கடக்க முனைந்தது. எங்கள் மகிழ்வுந்தை ஓரமாக நிறுத்தி அந்த ஆட்டுக்கூட்டத்தை மறித்து மறித்துப் படமாக்கினோம். அந்த ஆடுகளைப் பராமரிக்கும் இராமநாதபுரத்துத் தம்பி நன்கு ஒத்துழைப்பு நல்கினார். கடியலூர் உருத்திருங்கண்ணனார் எழுதிய பெரும்பாணாற்றுப்படையில் வரும் “கூழார் இடையன்”  என்னும் பொருள்பொதிந்த வரிக்கு இந்தக் காட்சிப்படுத்தல் தேவையாக இருந்தது.

மாலைப்பொழுது மங்குவதற்குள் பூவாளூர் சென்று அங்கிருந்த ப.சு.வின் தொண்டர் பூவாளூர் சண்முக வேலாயுதம் அவர்களை நேர்காணல் செய்தோம். அரிய படங்கள் சில அவர் இல்லத்தில் இருந்தன. பூவாளூர் செழுமையான ஊர். ஊர் மட்டுமன்று அந்த ஊர் அன்பர்களின் மனமும் செழுமையாகும். அவர்களின் அன்பில் நீந்தியபடியே இலால்குடி வந்து சேர்ந்தோம்.

திரு. சண்முகவேலாயுதம் இல்லத்தில் படப்பிடிப்பு

இலால்குடியில் வாழ்ந்த திரு சிவா அவர்கள் ப.சு. அவர்களின் மகனாக இருந்து பணிவிடை செய்த பெருமைக்குரியவர். ஐயாவுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்தவர். ஐயாவின் சிறப்பை இராசகோபுரத்தில் ஏற்றி அழகுபார்த்தவர், குடந்தை ப.சு. அவர்கள் இசையறிஞர் என்று மட்டும் நாம் அறிவோம். அவர் மிகச் சிறந்த இறைத்தொண்டர். சிவனிய, மாலிய நூல்களில் பேரறிவு பெற்றவர். பெரியபுராணத்தைப் பரப்புவதைத் தம் வாழ்நாள் பணியாகக் கொண்டிருந்தவர். இலால்குடி கோயிலில் பெருந்திருப்பிராட்டி பிள்ளைத் தமிழ் நூலினைக் கல்வெட்டாகப் பதிக்கச் செய்தவர். இலால்குடி அன்பர்கள் ப.சுந்தரேசனார் நாடுகாண் குழு என்ற பெயரில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இசைப்பணி செய்துவருகின்றனர். தமிழிசைக்கு இவர்களைப் போன்ற பெருமக்கள்தான் தொண்டுசெய்து வருகின்றனரே அல்லால் அரசோ, மேடை முழக்கிகளோ சிறு துரும்பு அளவும் செய்வதில்லை என்பதை இங்குக் குறித்தாதல் வேண்டும். 

ப.சு.நாடுகாண் குழு செய்துள்ள பணிகளை முற்றாக ஒருவர் ஆய்வு செய்யலாம். இலால்குடி கோயிலில் ப. சு. அவர்களின் நூற்றாண்டு நிகழ்வுகள் சிறப்பாக நடந்துகொண்டிருந்தன, தேவையான செய்திகளைப் படமாக்கிக்கொண்டோம். திரு. சிவா அவர்களின் தம்பியும் அவரின் மகளாரும் மற்றும் குடும்பத்தாரும் பேருவகையுடன் எங்களுக்கு வேண்டிய பல உதவிகளைச் செய்தமையை நன்றியுடன் குறிப்பிட்டாக வேண்டும். அனைவருக்கும் வாழ்த்துச்சொல்லி, அனைவரிடமும் வாழ்த்துப்பெற்று நாங்கள் புதுவை வந்துசேரும்பொழுது நள்ளிரவு இரண்டுமணியாகும்.

குடந்தை ப. சுந்தரேசனார் வாழ்க்கை ஆவணப்படமாகின்றது…

வழமையானது
பேராசிரியர் மா. வயித்தியலிங்கன் ப. சு. பற்றிய நினைவுரை( படப்பிடிப்பு)

  தமிழுக்கு உண்மையாக உழைத்த பெருமக்களை இத்தமிழுலகம் உரிய காலங்களில் போற்றுவதில்லை.  அவர்களின் பேரறிவை மதிப்பதும் இல்லை. அவர்களை வறுமையில் வாடாமல் காத்ததும் இல்லை. அவ்வாறு செய்திருந்தால் அத்தகு பெரியோர்களிடத்திருந்து இன்னும் பல்வேறு ஆக்கங்கள் இம்மொழிக்கும் நாட்டுக்கும் கிடைத்திருக்கும். அவ்வகையில் திரு. வி. க, மயிலை சீனி. வேங்கடசாமியார், பாவாணர், பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட பெருமக்கள் பல்வேறு இன்னல்களை ஏற்று வாழ்ந்துள்ளனர். எனினும் தங்களால் இயன்ற வகையில் இவர்கள் தமிழுக்குப் பாடுபட்டுள்ளனர்.

  அந்த வகையில் தமிழிசை மீட்சிக்கு உழைத்த குடந்தை ப. சுந்தரேசனார் அவர்கள் வறுமை வாழ்க்கையில் தம் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்துள்ளனர். அன்பர்கள் சிலர் அவரின் கடைசிக்காலத்தில் உதவியுள்ளனர் எனினும் அவரின் துறைசார் அறிவுக்கு ஈடான பொருள்வளத்தையோ, புகழ்நிலையையோ அவர்கள் பெறவில்லை என்பதுதான் உண்மை. தமிழிசைத்துறையில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத, பெருமைக்குரிய குடந்தை ப. சுந்தரேசனாரை வாழும்காலத்தில் போற்றாத மக்கள், மறைந்த பிறகா போற்றிப் புகழ்ந்து கொண்டாடுவார்கள்?

  இக்குறையை ஓரளவு போக்கும் வகையில் தமிழ்ப்பற்றாளர்கள் அன்னாரின் நூற்றாண்டு விழாவைத் தமிழகத்திலும் அயலகத்திலும் கொண்டாட முன்வந்துள்ளமை பாராட்டினுக்கு உரிய ஒன்றாகும். நூற்றாண்டு விழாவைப் புதுச்சேரியில் கொண்டாடிய இந்நிலையில் குடந்தை ப. சுந்தரேசனாரின் தமிழ் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் வகையில் ஓர் ஆவணப்படம் எடுக்கும் முயற்சியில் உள்ளோம்.

  எத்தகு பொருள் உதவியோ, ஆள் வலிமையோ இல்லாமல் மலையுடைக்கும் முயற்சிக்கு நிகரான படப்பிடிப்புப் பணியில் ஈடுபட்டு உழைத்த எனக்குப் பேராசிரியர் மு. இளமுருகன், புலவர் சூலூர் கௌதமன் உள்ளிட்டோர் ஊக்கமொழிகளைப் பகர்ந்ததோடு, என் பயணத்தில் உடன் வந்தும் மகிழ்வித்தனர். ஆம். புதுச்சேரியில் படப்பிடிப்பு என்று சொன்னவுடன் தம் பொருட்செலவில் வந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டு முழு ஒதுழ்ழைப்பு நல்கினர். பேராசிரியர் இ.அங்கயற்கண்ணி அம்மா அவர்களும் எங்களின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு பழைய நிகழ்வுகளை நினைவுகூர்ந்தார்.

  பூம்புகார் மாதவி மன்றத்தின் தலைவர் திரு. நா. தியாகராசன் ஐயா அவர்கள் தம் தள்ளாத அகவையிலும் தனித்து, பூம்புகாரிலிருந்து புதுவைக்கு வந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அதுபோல் பேராசிரியர் மா. வயித்தியலிங்கன்(சென்னை), பேராசிரியர் அரிமளம் பத்மநாபன் ஆகியோர் குடந்தை ப. சுந்தரேசனார் குறித்த நினைவுகளைப் பெருந்தன்மையுடன் பதிவு செய்துள்ளனர்.

 திருவாரூர் புலவர் இரெ. சண்முகவடிவேல், தவத்திரு ஊரன் அடிகளார், மலேயா பல்கலைக்கழகப் பேராசிரியர் சு. குமரன், ஆ. பிழைபொறுத்தான் ஆகியோர் முதற்கட்டப் படப்பிடிப்பில் கலந்துகொண்டு கருத்துரை வழங்கியுள்ளனர். அடுத்த படப்பிடிப்பு அரியலூர், திருமழபாடி, புள்ளம்பாடி, பூவாளூர், திருத்தவத்துறை (இலால்குடி), திருச்சிராப்பள்ளி ஆகிய ஊர்களில் நடைபெற உள்ளது.
புலவர் சூலூர் கௌதமன் ப.சு. பற்றிய நினைவுரை( படப்பிடிப்பு)

தவத்திரு ஊரன் அடிகளார் நினைவுரை( படப்பிடிப்பு)



திரு. நா. தியாகராசன்(பூம்புகார் மாதவி மன்றம்) ( படப்பிடிப்பு)


முனைவர் இ. அங்கயற்கண்ணி  நினைவுரை( படப்பிடிப்பு)

முனைவர் மு.இளமுருகன் நினைவுரை( படப்பிடிப்பு)


படப்பிடிப்புக்குப் பிறகு ஓரிடத்தில் உரையாடியபொழுது

தமிழ் இலெமூரியாவின் தமிழ்ப்பணி….

வழமையானது
  இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு வெளியில் மகாராட்டிரா மாநிலத்திலிருந்து தமிழ்மொழி, தமிழ் இனம் சார்ந்து அறிவார்ந்த செய்திகளைத் தாங்கி வரும் சிறப்பான மாத இதழ் தமிழ் இலெமூரியாவாகும். கடந்த ஏழு ஆண்டுகளாகத் தமிழினம், தமிழ் மொழி என்கிற இரு கரைகளுக்கிடையே நடையிடும் இவ்விதழில் தமிழ் மக்களிடையே மாந்த நேய உணர்வு, மொழி மற்றும் பண்பாட்டு வளர்ச்சி, வரலாற்றுத் துய்ப்புகள் போன்றவற்றை நல்ல தமிழில் எடுத்தியம்பும் இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது. தற்காலத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் பெரும்பாலான தமிழ் இதழ்களிலிருந்து சற்று வேறுபட்ட கண்ணோட்டத்தில் தமிழ், தமிழர் குமுகாய வளர்ச்சி இலக்கை அடைவதற்குரிய அரிய ஆய்வுகள், வரலாற்று நிகழ்வுகள், இயற்கையை போற்றுதலுக்குரிய நம் கடமைகள், தமிழறிஞர்களின் வாழ்கைக வரலாறு போன்றவை இதன் உள்ளீடுகளாக அமைந்துள்ளன. இயன்றவரை தூய தமிழில் செய்திகளைத் தருவதில் தமிழ் இலெமூரியா முன்னிற்கின்றது.


தமிழ் இலெமூரியா ஆசிரியர் திரு. சு. குமணராசன் அவர்கள்
  கடந்த நாற்பது ஆண்டு காலமாகத் தமிழ், தமிழர் மேன்மைக்காக மும்பை மாநகரில் தொய்வின்றிச் சமூகப் பணி ஆற்றி வரும் திரு சு. குமணராசன் முதன்மை ஆசிரியராகப் பொறுப்பேற்று வழி நடத்துகின்றார். கண்ணைக் கவரும் வண்ண அமைப்பில் இந்த இதழ் உலாவருவது இதன் தனிச்சிறப்பாகும்.
  இந்திய நாட்டில் குறிப்பாகத் தமிழ்நாடு, மகாராட்டிரம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும், தமிழர்கள் பெருமளவில் வாழும் மத்திய தரைக் கடல் நாடுகளிலும், கிழக்காசிய நாடுகளிலும் எண்ணற்ற வாசகர்களை தன்வயப்படுத்தி சற்றொப்ப மூன்று இலக்கம் தமிழ் ஆர்வலர்களை வாசகர்களாகக் கொண்டுள்ள இதழாகத் தமிழ் இலெமூரியா விளங்குகின்றது. மாதந்தோறும் தவறாமல் வெளிவந்துகொண்டிருக்கும் இந்த இதழைத் தமிழர்கள் வாங்கிப் படிக்க வேண்டும். இதில் படைப்புகளை வழங்கிப் பங்களிப்புச் செய்ய வேண்டும்.
  பல்கலைக்கழக நூலகங்கள், கல்விக் கூட நூலகங்கள், அரசு பொது நூலகங்கள் என அனைத்து இடங்களில் தொடர்ந்து வாங்கப்பட்டு வருகின்ற ஒரு சீரிதழ் இது என்பது இதன் பெருமையின் அடையாளம் ஆகும்.
  இணக்கமான இந்தச் சீரிய கூட்டுணர்வு முயற்சியில் தாங்களும் பங்கேற்று மனித நேய மாண்புகள் பெருகிடவும், தமிழினம் வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதற்கும் துணை நிற்கலாம். தமிழார்வலர்கள் இந்த இதழை நண்பர்களுக்கு அறிமுகம் செய்யலாம். தமிழ்ச்செல்வர்கள் வெற்று ஆரவாரப் பணிகளில் தம் செல்வத்தை இழப்பதைக் காட்டிலும் இந்த இதழ் வளர்ச்சிக்குத் தம் அரும்பொருள் வழங்கி உதவலாம்.
  தமிழ் இலெமூரியாவை வளர்த்தெடுப்பது தமிழ்ப்பற்றாளர்கள் ஒவ்வொருவரின் கடமையாகும்.

இணையத்தில் படிக்க இங்குச் செல்க
தமிழ் இலெமூரியா கட்டணம்:
ஆண்டு உறுப்பாண்மை: 180 உருவா
மூன்று ஆண்டு : 500 உருவா
வாழ்நாள் கட்டணம்: 5000 உருவா
புரவலர் கட்டணம்: 10, 000 உருவா
தொடர்புக்கு:
Tamil Lemuriya Publications
102 B Wing, Dannes Building,
Veer Savarkar Nagar, Thane (W),
Maharashtra – 400 606, India
Phone : 022 – 25806298

மின்னஞ்சல்: tamil.lemuriya@gmail.com

இணையப்பக்கம்: http://www.tamillemuriya.com/

திருத்தவத்துறை(இலால்குடி)யில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் நூற்றாண்டு விழா

வழமையானது
திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருத்தவத்துறை(இலால்குடி)யில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் நூற்றாண்டு விழா 28. 05. 2014 (புதன் கிழமை) காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது. திருத்தவத்துறை(இலால்குடி) அருள்மிகு பெருந்திருப்பிராட்டியார் உடனுறை அருள்மிகு எழுமுனிவர்க்கிறைவர் திருக்கோயில் வளாகத்தில் பண்ணிசை அரங்கு, படத்திறப்பு, உரையரங்கம், பாராட்டரங்கம், கலைமாமணி தாயுமானவர் அவர்களின் நிகழ்ச்சிகள் எனச் சான்றோர் பலரும் பங்கேற்கும் அரிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.

விழாத் தலைமை: புலவர் மாமணி வீ. தமிழ்ச்சேரனார்

முன்னிலை: செயல் அலுவலர் அவர்கள், திருக்கோயில் இலால்குடி

பண்ணிசை அரங்கம்: 
தேவார இசைமணி சுந்தர சாமவேதீசுவரன்
திருமுறை நன்மணி நா சுப்பிரமணியன் குழுவினர்.

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் படத்திறப்பு
முதுபெரும் புலவர் ப. அரங்கசாமி அவர்கள்

நூற்றாண்டு விழாத் தொடக்கவுரை: முனைவர் மு.இளங்கோவன்

தலைமையுரை: புலவர் மாமணி வீ. தமிழ்ச்சேரனார்

யாம் கண்ட பண்ணாராய்ச்சி வித்தகர் – உரையரங்கம்

கயிலை எசு. பி. இராமசாமி
புலவர் மா. திருநாவுக்கரசு
இறைநெறி இமயவன்
திரு. க. தமிழழகன் நாடுகாண் குழு
திரு. ச. இராமையா, காரைப்பாக்கம்
திரு. து. திருஞானம், பாளையப்பாடி
திரு. பூவை பி. தயாபரன், பூவாளூர்
திரு. வ. பஞ்சநாதன், திருமானூர்
திரு. அ. சீனிவாசன், திருத்தவத்துறை
திரு. நா. சு. மணியன், திருமங்கலம்
திரு. சி. சுந்தரராசலு, கீழைப்பழுவூர்
திரு. சு. பெரியசாமி, புள்ளம்பாடி

பாராட்டுச் சிறப்பரங்கம்
திரு. இராம. துரைக்கண்ணு- தனமணி இணையர் (80 அகவை நிறைவு)

விழாப் பேருரை முனைவர் சண்முக செல்வகணபதி
தமிழின்பம் பருக! அனைவரும் வருக!

பொதிகை தொலைக்காட்சிக்கு நன்றி…

வழமையானது
பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களின் தமிழிசை வாழ்க்கையை இன்று(24.05.2014) முற்பகல் 11 மணி முதல் 12 மணி வரை ஒளிபரப்பி உலகத் தமிழர்களுக்கு அறிமுகம் செய்த பொதிகை தொலைக்காட்சியின் புதுச்சேரி நிலையத்தாருக்கு நன்றி. இதில் சிறப்பாகப் பங்காற்றிய பரதநாட்டியக் கலைஞர், ஒலிவட்டுகள் உதவியோர், ஒளிஓவியர், படத்தொகுப்பாளர், உதவியாளர்கள், தயாரிப்பாளர், மற்றும் நிலையத்தின் அதிகாரிகள், படப்பிடிப்புக்குத் துணைநின்ற நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

மின்னஞ்சல், இணையம், தொலைபேசி, குறுஞ்செய்திகள் வழியாகச் செய்திகளைப் பகிர்ந்தோருக்கும் பாராட்டுமொழிகள் உரைத்தோருக்கும் நன்றி.
தொடர்ந்து குடந்தை ப. சுந்தரேசனாரின் எஞ்சிய குரலிசையையும் இத்தமிழுலகம் கேட்டு மகிழ ஆவணப்படுத்துவோம்.

நினைவுக்காக ஒளிபரப்பில் எடுக்கப்பட்ட சில படக்காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன:





பொதிகை தொலைக்காட்சியில் குடந்தை ப. சுந்தரேசனார் நினைவு ஒளிபரப்பு

வழமையானது
கயலெழுதி, வில்லெழுதி பாடலுக்குரிய காட்சி

சிலப்பதிகாரம் கானல்வரியைக் குடந்தை ப. சுந்தரேசனார் பாடியுள்ளார். அந்தப் பாடலுக்கு நாட்டியமாடும் செல்வி கிருத்திகா இரவிச்சந்திரன்(இடம்: பூம்புகார் கடற்கரை)

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனாரின் தமிழிசையைப் பருகிய பின்னர் அவர் வாழ்க்கையை இத்தமிழுலகம் முழுமையாக அறியாமல் உள்ளதை நினைத்து யான் பலநாள்… பலவாண்டுகள் கவலைகொண்டிருந்தேன்.

தமிழகத்தில் தமிழிசையை மீட்பதற்கு உழைத்த ஒரு போராளியை இம்மக்கள் கண்டுகொள்ளாமல்விட்டதை நினைத்து இனி அமைதியாக இருத்தல்கூடாது என்று கடந்த கால் நூற்றாண்டுகளாகத் தகவல் தொகுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தேன். இப்பொழுதும் இது தொடர்கின்றது.

குடந்தை கதிர். தமிழ்வாணன், பேராசிரியர் தமிழண்ணல் ஐயா, பொன்னாவாரம்பட்டிப் பொறியாளர் மு.அறவாழி, த. அன்புவாணன் வெற்றிச்செல்வி, கு. வெ.கி. செந்தில், சூலூர் கௌதமன், முனைவர் மு.இளமுருகன், ப. திருநாவுக்கரசு, புலவர் நா. தியாகராசன், புலவர் சுவை. மருதவாணன், புலவர் திருநாவுக்கரசு, நிழல் திருநாவுக்கரசு, அ. தேவநேயன் உள்ளிட்டோரின் தொடர் ஒத்துழைப்பால் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களின் குரலில் பல பாடல்களை ஒருவாறு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து திரட்டினேன். அயல்நாடுகளிலிருந்தும் திரட்டினேன்.

குடந்தை ப. சுந்தரேசனாரைத் தம் வழிபடு கடவுளாகப் போற்றியவர்களும், தம் ஆசிரியராக நினைத்து ஆதரித்தவர்களும், உறவினர்களாகப் பேணிக்கொண்டவர்களும், தமிழ்ப் பெரியவராக அவரை நினைத்துத் தம்மை மெய்யடியாராக நினைத்துப் பணிவிடைசெய்தவர்களும் தமிழகத்தில் மிகுந்த எண்ணிக்கையில் உள்ளனர் என்பதைக் களப்பணிகளில் காணநேர்ந்தது. குடந்தை ப. சுந்தரேசனாருக்குக் களம் அமைத்துத் தந்தவர்களும், கைகோர்த்துச் செலவு செய்தவர்களும் ஏராளம்.

இத்தகு பெருமைக்குரிய பெரியவரின் பணிகளை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு சேர்க்கும் வகையில் அமெரிக்காவில் நூற்றாண்டு விழா நடத்த பெட்னா அமைப்பைச் சேர்ந்த அன்பர்களுக்கு வேண்டுகோள் விடுத்தேன். முழு மனத்துடன் விழா கொண்டாட முன்வந்த அவர்களைத் தமிழுலகம் என்றும் நினைக்கும்.

அதுபோல் புதுச்சேரியில் நூற்றாண்டு விழா நடத்தியும் நினைவுகூர்ந்தோம். அடுத்தடுத்து பல ஊர்களில் நூற்றாண்டு விழா நடப்பதற்குத் திட்டமிட்டு வருகின்றோம். அந்தவகையில் திருவாரூரில் நூற்றாண்டு விழா நடந்துள்ளது. வரும் 28.05. 2014 இல் இலால்குடியிலும், 01.06.2014 இல் சென்னையிலும் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஊடகங்களின் வழியாக ப. சு. ஐயாவின் பாடல்களை வெளியுலகிற்குத் தெரியப்படுத்த முயன்றோம்.

பொதிகை தொலைக்காட்சியில் ஐயாவின் பாடல்கள் சிலவற்றை ஒளிபரப்பும் முயற்சிக்குப் புதுவைத் தொலைக்காட்சி நிலையத்தார் மனமுவந்து ஒத்துழைப்பு நல்கினர். இந்திய மக்களின் கலைகளுக்கும், பண்பாட்டுக்கும் அளப்பரிய தொண்டாற்றிவரும் பொதிகை தொலைக்காட்சியில் பண்ணாராய்ச்சியாளர் குடந்தை ப. சுந்தரேசனாரின் வாழ்க்கைக் குறிப்புகளும் பாடல்களும் மிகச் சிறப்பாக ஒளிபரப்பாக உள்ளன.


வரும் காரி(சனி)க்கிழமை 24. 05. 2014 இந்திய நேரம் முற்பகல் 11 மணி முதல் 12 மணி வரை இந்தச் சிறப்பு ஒளிபரப்பு நிகழ உள்ளது. பொதிகை தொலைக்காட்சியில் இந்த ஒளிபரப்பை உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் பார்க்கமுடியும். இணையத்தின் வழியாகவும் உடனுக்குடன் பார்க்கலாம்.

இணையத்தில் பார்க்க


குமரகுருபரர் பாடிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழிலிருந்தும், சிலப்பதிகாரத்திலிருந்தும், திருவாசகத்திலிருந்தும், திருத்தவத்துறை பெருந்திருப்பிராட்டி பிள்ளைத்தமிழிலிருந்தும் சில பாடல்களைப் பண்ணாராய்ச்சி வித்தகரின் குரலில் கேட்கலாம்.

அடுத்த வாய்ப்புகளில் சங்க இலக்கியம், கம்பராமாயணம், ஆழ்வார் பாடல்களிலிருந்து பாடிய பாடல்களைக் கேட்கும் வாய்ப்பினை உருவாக்குவோம். தமிழ்ச்செல்வர்கள் யாரேனும் முன்வந்து பொருட்கொடை வழங்கினால் ப. சுந்தரேசனாரின் குரலில் சிலப்பதிகாரத்தின் முதன்மையான பாடல்கள், பரிபாடல் பகுதிகள், திருமுருகாற்றுப்படை, திருமுறைகள், நாலாயிர திவ்ய பிரபந்தம், சித்தர் பாடல்களின் பகுதிகளைத் தமிழுலகிற்குத் தொகுத்து வழங்கமுடியும். எமக்கு அமையும் ஒத்துழைப்பு, தடைகளைப் பொறுத்து எங்கள் பணி அமையும்.

தமிழிசை மீட்க துணைநின்ற அனைத்து நல்லுள்ளங்களையும் நன்றியுடன் போற்றுகின்றோம்.

 அரவஞ்சி வாழ்வதுவே என்னும் வரிக்கு…


திமில் வாழ்நர் சீரூர் காட்சி

படப்பிடிப்பு குழு

இருபதாம் நூற்றாண்டில் தமிழிசையை மக்களிடம் பரப்பியவர் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் – புதுச்சேரி நூற்றாண்டு விழாவில் அறிஞர்கள் பேச்சு

வழமையானது
தவத்திரு ஊரன் அடிகள் நூலை வெளியிட பேராசிரியர் ம.இலெ. தங்கப்பா பெற்றுக்கொள்ளுதல். அருகில் பாரிசு பாலகிருட்டினன்
பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் நூற்றாண்டு விழாவை உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கஇந்திய ஒன்றியமும், புதுச்சேரி இலக்கிய வட்டமும் இணைந்து இன்று 17. 05. 2014 சனிக்கிழமை மாலை ஆறு மணிமுதல் ஒன்பது மணிவரை புதுச்சேரி செயராம் ஓட்டலில் நடத்தின.

குடந்தை ப. சுந்தரேசனார் நூற்றாண்டு விழாவுக்கு வடலூர் ஊரன் அடிகளார் தலைமை தாங்கினார். முனைவர் மு.இளங்கோவன் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை வரவேற்று வரவேற்புரையாற்றினார். முனைவர் அரிமளம் பத்மநாபன் விழா குறித்த நோக்கவுரையாற்றினார். மலேசிய இந்தியர் இயக்கங்களின் ஒருங்கிணைப்புப் பேரவையின் தேசியத் தலைவர் முனைவர் விக்டர் சுப்பையா, இரா. மதிவாணன் முன்னிலையில் இவ்விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு இந்தியக் கடலோரக் காவல்படையின் புதுச்சேரி பிரிவு கமாண்டன்டு நா. சோமசுந்தரம் நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினார்.

நிகழ்ச்சியில் மலேசிய எழுத்தாளர் புலவர் முருகையன் எழுதிய உலகத்தின் ஒளிவிளக்கு பெற்றோரும் பிள்ளைகளும் என்ற நூலினை தவத்திரு ஊரன் அடிகள் வெளியிட, முதற்படியினைப் பேராசிரியர் ம. இலெ. தங்கப்பா பெற்றுக்கொண்டார். சிறப்புப் படிகளை பாரிசிலிருந்து வருகை தந்த திரு. பாலகிருட்டிணன், புதுவை திரு. அமரநாதன் பெற்றுக்கொண்டனர்.

குடந்தை ப. சுந்தரேசனார் குறித்த நினைவுரைகளைச் சூலூர் பாவேந்தர் பேரவையைச் சேர்ந்த செந்தலை கௌதமன், தமிழியக்கத் தலைவர் முனைவர் மு.இளமுருகன், தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் இ. அங்கயற்கண்ணி, மலேசியப் பல்கலைக்கழகத்தின் இந்தியவியல்துறைத் தலைவர் முனைவர் சு. குமரன், புதுவைத் திருவள்ளுவர் மன்றத்தின் நிறுவுநர் சுந்தர. இலட்சுமிநாராயணன், ஆ பிழைபொறுத்தான் ஆகியோர் வழங்கினர்.

குடந்தை ப. சுந்தரேசனாரின் மாணவர் பேராசிரியர் மா. வயித்தியலிங்கன் சுந்தரேசனாரின் சிறப்புகளை எடுத்துரைத்து, சுந்தரேசனார் பாடிய பாடல்களை அரங்கிலிருந்தவர்களுக்குப் பாடிக்காட்டிச் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களுக்கு மு. பாலசுப்பிரமணியன் நன்றியுரை வழங்கினார்.

நூற்றாண்டு விழா – காட்சிகள்

மு.இளங்கோவன் வரவேற்புரை

தவத்திரு ஊரன்அடிகள் தலைமையுரை

முனைவர் அரிமளம் பத்மநாபன் சிறப்பிக்கப்படுதல்

மலேசியத் தமிழர்களைச் சிறப்பித்தல்

மலேசியத் தமிழர்களைச் சிறப்பித்தல்

மலேசியப் பேராசிரியர் குமரன், டாக்டர் விக்டர் சுப்பையா சிறப்பிக்கப்படுதல்

புலவர் சூலூர் கௌதமன் நினைவுரையாற்றுதல்

சுந்தர இலட்சுமிநாராயணன் நினைவுரை

முனைவர் மு.இளமுருகன் எழுச்சியுரை

டாக்டர் விக்டர் சுப்பையா(மலேசியா) வாழ்த்துரை
பொறியாளர் பாலா நன்றியுரை

தமிழிசை மீட்ட தலைமகனுக்கு நூற்றாண்டு விழா! உலகத் தமிழர்களே உணர்வால் ஒன்று கூடுவோம்!

வழமையானது

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களின் நூற்றாண்டு விழா 17. 05. 2014 காரி(சனி மாலை) 6 மணிக்குப் புதுச்சேரியில் நடைபெறுகின்றது. ப.சு. அவர்களுடன் பழகியவர்கள், அவரின் மாணவர்கள், அவரின் இசையில் ஈடுபாடு உடையவர்கள், புதுவைத் தமிழ் அன்பர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு பண்ணாராய்ச்சி வித்தகரின் நினைவைப் போற்ற உள்ளனர். ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்!