muelangovan எழுதியவை | ஜூன் 5, 2008

என் பிறந்த வீடு சென்றுவந்தேன்…

மூன்றுநாள் என் பிறந்த ஊர் சென்று திரும்பினேன்(01,02,03 -06.2008).
நல்ல மகிழ்ச்சி ஏற்பட்டது.
குழந்தைகள் மகிழ்ந்தனர்.

எங்கள் பழைய வீடு இடிபாடுகளுக்கு இடையே இருக்கிறது.
அடுத்த ஆண்டு விழுந்துவிடும்.
அந்த வீட்டில் குழந்தைகளைக் கொண்டுபோய் படுக்கவைத்து விளையாட வைத்து
அழைத்து வந்தோம்.

எத்தனையோ முயற்சி செய்தேன்.எங்களுக்கு இடையே ஒற்றுமை இல்லாததால் அதனைச் சீர்செய்யமுடியவில்லை.64 உத்திரங்கள் கொண்டு அமைக்கப்பட்டது.
அனைத்தும் இரங்கூன் தேக்கு மரம் கொண்டு கட்டப்பட்டது.
அழகிய வேலைப்பாடுடைய சரங்கள்,அருகால் நிலை,தூண்கள்.
சட்டங்கள்(ரீப்பர்) உட்பட அனைத்தும் இழைப்புவேலை கொண்டது.

வீடு முழுமையடையும் சூழலில் எங்கள் தாத்தா இறப்பு நிலையில் இருந்ததால் அவசரமாக வீட்டின் ஒரு பகுதியை முடிக்க வேண்டிய கட்டாயம்.எனவே சில இடங்களில் பொய்த்தூண்கள் இடப்பட்டன.அப்பொய்த்தூண்களுக்கு மெய்த்தூண்கள் இன்றும் பரண்களில் உள்ளன.அப்பொய்த்தூண்களுடனே இன்றுவரை அந்த வீடு வாழ்ந்தது.அவற்றைச்சரிசெய்ய முடியாதபடி பின்னாளில் குடும்பம் பொருள்வளம் இன்றிப்போனது.

ஒரு ஏக்கரை வளைத்துக் கட்டப்பட்டவீடு அது.’கோட்டையான் வீடு’ என்றே இன்றும் அழைக்கப்படுகிறது.கோட்டைபோன்று இருக்கும்.இரண்டு காலவாய் போட்டுக் கட்டப்பட்டது.இவ்வீடு கட்டி முடித்து எஞ்சிய பொருட்களைக் கொண்டுசுண்ணாம்புக்குழியில் வேறொரு வீடு கட்டப்பட்டதாம்.

வீடு கட்ட மிகப்பெரும் மரங்கள் வந்து இறங்கியுள்ளன.
அவற்றைத் தொன்னூரு ஐயம்பேட்டையைச் சேர்ந்த வாள்காரர்கள் அறுத்து துண்டாடி வழங்கியுள்ளனர்.தொன்னூரு இன்று தென்னூர் என்று அழைக்கப்படுகிறது.வலிமையனவர்கள் அப்பகுதியில் இருப்பார்களாம்.தீவட்டிக்கொள்ளையடிப்பது அவர்களின் வழக்கம்.எனவே முறைவைத்துப் பொருள்களை வழங்கிவிட்டால் எந்தப்பொருளும் கொள்ளையடிக்கப்படாதாம்.

அத்தகு வலிமை வாய்தவர்களின் உழைப்பில் எங்கள் வீடு உருவானது.அவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒரு குடம் கள் வழங்கப்படுமாம்.மூன்று நாளைக்கு ஒரு முறை கிடாகறி சோறு வழங்கப்படுமாம்.பலர் சாப்பாட்டுக்கே வேலை செய்துள்ளனர்.
தலைமைத் தச்சனுக்கே 50 காசுதான் சம்பளம்.

அவ்வீடு கட்டும்பொழுது சாப்பாட்டுக்கு இழைப்புளி போட்ட தங்கத்தாசாரியாரை நான் பார்த்துள்ளேன்.(அண்மையில்தான் மறைந்தார்.மிகப்பெரிய உடம்பு.என்னை ஆசாரியார் வேலைக்குப் பழக்கிப்பார்த்துத் தோற்றார்.நான் இழைப்புளி போடத் தெரிந்துகொண்டேன்.அவர் எங்களை மிக ஏளனமாகத் திட்டித் தீர்ப்பார்.அவருக்கு ஈடுகொடுத்து வேலை செய்யாததே காரணம்.பல் நீண்டிருக்கும்.அவர் இளைஞராக இருக்கும்பொழுது பல்லில் ஒரு மூட்டை பாரத்தைத் தூக்கியவராம்.இடுப்பில் ஒரு இரும்புச் சங்கிலியைக் கட்டிக்கொண்டு பனைமரத்தில் பிணைத்து அச்சங்கிலியை அறுப்பாராம்.அடிக்கடி தேவரடியார் வீடு சென்றுவருபவராம் தங்கத்தாசாரியார்.கும்பகோணத்திற்குப்படம்பார்க்கச்செல்ல எதிரித்திசையில் உள்ள செயங்கொண்டம் சென்று வாடகை மிதிவண்டி எடுத்துக்கொண்டு செல்வார்களாம்.)

எங்கள் உடையார்பாளையம் வட்டத்திலேயே அதுபோல் வீடு கட்டப்படவில்லை.அக்காலத்தில் எங்கள் வீட்டைக்கட்டி முடித்ததும் அக்கம் பக்கம் ஊரில் உள்ளவர்கள் வண்டி கட்டிவந்து வேடிக்கை பார்த்துச்சென்றுள்ளனர்.80 வயதைக்கடந்த வீடு.ஆடு, மாடுகள் கட்டி வைக்கும் கூடாரம்போல் காட்சி தருகிறது.

எத்தனைபேர் அமைதியாகப் படுத்து உறங்கியிருப்பார்கள்.எத்தனை திருமணங்கள் அந்த வீட்டில் நடந்திருக்கும். எத்தனை இழவு விழுந்திருக்கும்.எவ்வளவு தானியங்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும்.எத்தனைக் குழந்தைகள் அந்த வீட்டில் தவழ்ந்திருக்கும்.
அந்த வீட்டைப் புதுப்பித்தால் ஒரு அழகிய கலைக்கோயிலை உயிரூட்டியதற்குச் சமமாகிவிடும்.முயன்று பார்ப்போம்

முனைவர் மு.இளங்கோவன் பிறந்த வீடு தோற்றம்


முனைவர் மு.இளங்கோவன் பிறந்த வீடு தோற்றம்


மறுவினைகள்

  1. மிகவும் அருமையான நிகழ்வு. இந்த அனுபவம் எத்துனை பேர்க்கு கிடைக்கும் இன்று கிராமத்து வீடுகள் பல அழிந்து வருகிற நிலையில் உங்களின் புதுப்பிக்கும் முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

    நன்றிகளுடன்
    வெங்கடேஷ்
    thiratti.com


மறுமொழி அளிக்கவும்

பின்னூட்டம் இட புகுபதிகை செய்திருக்கவேண்டும்

வகைகள்