கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற மாநாட்டுத், தமிழியல் கருத்தரங்கிற்கு 16.05.2008 காலை புதுச்சேரியிலிருந்து புறப்பட்டு,திருச்சிராப்பள்ளி வழியாகச் சென்றன்.திருச்சிராப்பள்ளியில் பேராசிரியர் பே.க.வேலாயுதம் அவர்களைச் சந்திப்பது என் நோக்கம்.திருச்சிராப்பள்ளியில் நான் முனைவர்பட்ட ஆய்வு மேற்கொண்டபொழுது பேராசிரியர் பே.க.வேலாயும் அவர்களின் அறிவு மேன்மை கண்டடு வியந்துள்ளேன்.அவருடன் மாலை வேளைகளில் உரையாடுவது அந்நாள் வழக்கம்.தமிழ்த்தந்தி சிவலிங்கனார்,காட்டூர் நாணயவியல் அறிஞர் ப.சீனிவாசன்,முனைவர் இரா.திருமாறன் அவர்கள்,பேராசிரியர் நாகராசன்,பேராசிரியர் திருஞானம் உள்ளிட்ட அறிஞர் பெருமக்களுடன் பழகவும் வேலாயுதனார் காரணமாக இருந்தார்.
எங்கள் ஊருக்கு அருகில் உள்ள மருதூர் ஊரினர்.மருதூர் இளங்கண்ணன் அவர்கள் நம் பேராசிரியரின் உடன்பிறப்பு.தமிழ் இலக்கண,இலக்கியங்கள்,கிரேக்க இலக்கியங்களில் நல்ல புலமை,வானியல் அறிவு,வடமொழி இலக்கியஅறிவு நிரம்பப் பெற்றவர்.இவர் வரலாற்றுச் சிறப்பு மிக்க சங்க இலக்கியத்தில் இடம்பெறும் ஊர்களைப் பற்றி ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர்.பல நூல்கள் அகராதிகளை உருவாக்கியுள்ளார்.இவர்களை 16.05.2008 பிற்பகல் இரண்டு மணியளவில் கண்டேன்.நீண்டநேரம் உரையாடினேன். அவர்களைச் சில படம் எடுத்துக்கொண்டு 5 மணிக்குத் திருச்சிராப்பள்ளிப் பேருந்து நிலையத்தில் பேருந்தேறி இரவு 11 மணிக்குக் கோவை சென்றடைந்தேன்.
அப்பொழுது பல்கலைக்கழகம் செல்ல பேருந்து இல்லை என்றனர்.விடுதி எடுத்துதான் தங்க வேண்டும் என்ற நிலை.அப்பொழுது என்னுடன் பேருந்தில் பயணம் செயத அன்பர் தங்கள் இல்லத்தில் வந்து தங்கிச்செல்ல வேண்டினர்.அவர்பெயர் நெடுமாறன் ஆகும்.அவரின் தொழில் காண்பொளி எடுப்பது.வெளியூரில் காண்பொளி பணி முடித்து மீண்டவர் என்னையும் அழைத்தார்.5 மணிநேரம் ஓய்வெடுத்து பல்கலைக்கழகம் செல்ல நினைத்து அவருடன் சென்றேன்.
முதற்கண் அவர் பெரிய தந்தையார் இல்லத்தில் கையில் கொண்டுவந்த பொருள்களைக் கொண்டுபோய் வைக்கச் சென்றோம்.அவர் பெரிய தந்தையாரிடம் உரையாடியபொழுது அவர் தமிழ்ப்பேராசிரியர் என்பதும் எங்கள் ஊருக்கு அருகில் உள்ள ஊரினர் எனவும் பணியின்பொருட்டு கோவையில் தங்கியுள்ளதாகவும் கூறினார்.பேராசிரியர் கனல்மைந்தன் அவர்களுடன் பணி புரிந்தமையும் நினைவூட்டினார்.எனக்குத் தெரிந்த பல பேராசிரியர்கள் அவரின் நண்பர்கள்.உணவு உண்ணச் சொல்லி அன்புடன் வேண்டினர். காங்கேயம் ஊரில் உண்டதால் ஒப்புக்குச் சிறிது உண்டேன்.அவர்களிடம் அன்பு விடைபெற்று மாறன் இலத்திற்குச் சென்று உரையாடினேன்.நல்ல நண்பர்.உதவும் உள்ளம் வாய்த்தவர்.தம் ஊரில் உள்ள இளைஞர்களுக்குக் காண்பொளி எடுக்க பழக்கி அவர்களுக்கு வேலை வழங்கிவருபர். நல்ல நண்பர் கிடைத்த மகிழ்வில் அவர்களிடம் விடைபெற்று காலை 8.30மணிக்குக் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் அடைந்தேன்…